சொர்க்கம் யாருக்கு


விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன் அஸ்வமேத யாகம் செய்தான். யாகத்தில் மன்னர்கள், ரிஷிகள் பங்கேற்றனர். யாகத்தின் முடிவில் மன்னன் தன் நண்பர்களான பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி மற்றும் நாரத மகரிஷி ஆகியோருடன் தேரில் உலா சென்றான். 

நாரதரிடம் அஷ்டகன், “மகரிஷி! நாங்கள் நால்வரும் புகழ் பெற்ற அரசர்கள். தாங்களோ தலைசிறந்த ரிஷி. இப்போது நம் ஐவரில் நால்வர் மட்டுமே சொர்க்கத்துக்கு செல்லலாம் என்றால் தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?” என்று கேட்டான். நாரதர் அவனிடம், ''நீ தான்” என பதிலளித்தார்.

உடனே அஷ்டகன், ''ஏன் என்னை இறங்கச் சொல்வீர்கள்?'' என கேட்டான்.“அஷ்டகா! யாகத்தின் போது நீ ஆயிரக்கணக்கில் பசு தானம் செய்தது பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசினாய். கொடுத்ததை சொல்லி பெருமைப் படுபவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடையாது,” என விளக்கினார்.

அடுத்து, ”மூவர் மட்டும் தான் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்றால் நம் நால்வரில் யாரை இறக்குவது?” என மற்ற அரசர்கள் நாரதரிடம் கேட்டனர். அதற்கு நாரதர், “இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சென்று கொண்டிருந்தேன். மூன்று வயோதிகர்கள் வந்தார்கள். அவர்கள் மூன்று குதிரைகளையும் தானமாக பெற்றுச் சென்றனர். 

இழுப்பதற்கு யாரும் இல்லாமல் தானே தேரை இழுத்தான். ஆனால் மனதுக்குள், ”இந்த பெரியவர்களுக்கு சிறிதும் அறிவில்லை. எதைத் தான் தானமாக கேட்பது என்கிற தெளிவுமில்லை என குமைந்து கொண்டான். தானம் தந்து விட்டு நொந்து கொள்பவனுக்கு சொர்க்கத்தில் இடமில்லை“ என்றார்.

“மூவரில் இருவருக்கு தான் சொர்க்கம் என்றால் யார் இறங்க வேண்டும்?” என மன்னர்கள் அடுத்த கேள்வியை தொடுத்தனர். 'வசுமனஸ்” என்ற நாரதர், 

இவன் பெரிய ரதம் வைத்திருந்தான். அதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதன் மீது தனக்கு உரிமையில்லை என்றும் சொன்னான். ஆனால், யாருக்கும் அதை தானம் அளிக்கவில்லை. தானும் பயன்படுத்தவில்லை. வெறும் வார்த்தை சொர்க்கத்தை தராது,'' என விளக்கினார்.

“சரி! சிபியும் நீங்களும் மட்டுமே தேரில் இருப்பதாக வைப்போம். சொர்க்கத்தில் ஒருவருக்கே இடம் இருக்கிறது எனில் இப்போது யார் இறங்குவது?” என மன்னர்கள் வினா எழுப்ப, 'நான் தான்” என்ற நாரதர், “மன்னன் சிபி புகழுக்காகவோ, புண்ணியத்துக்காகவோ தானம் செய்ததில்லை. இல்லாதவர்களுக்கு உதவவே தன்னிடம் செல்வம் இருப்பதாக கருதினான். எனவே சொர்க்கத்துக்கு செல்லும் தகுதி அவனுக்கு இருக்கிறது, ” என்றார்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா