தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால்...


அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். 

மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்தப் பூமியில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த சிரஞ்சீவிகளில் ஒரு பிரபலம் மார்கண்டேயன். பின்னே.. இவனைக் காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமானே காலனை காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், அவர் காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் அநேகருக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா?

மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்றுக் கொள்” என்று சொல்லியிருந்தார்.

மார்க்கண்டேயனும், தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.

ஒருமுறை அத்திரி, வசிஷ்டர், கவுதமர், கஷ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்தரிஷிகள் மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.

அவர்களின் பாதங்களில், மார்கண்டேயன் பணிந்தான். அப்போது அவர்கள், “தீர்க்கா யுஷ்மான் பவ'' (தீர்க்காயுளுடன் வாழ்க) என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று.

என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் சொல்வதற்காக செல்கிறார்கள். மார்க்கண்டேயனும் அவர்களுடன் செல்கிறான். போனவன், பிரம்மாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்று விட்டான். விதியை எழுதிய அவரும், அவனுக்கு 'தீர்க்காயுஷ்மான் பவ' என்று வாழ்த்தி விட்டார். இப்படி பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.

பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமை. ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 வயதாக, அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரம் தருகிறார்.

பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.

எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியைப் பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றிவிடும்.

அதேநேரம், ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள். அப்படி செய்தால் அவர்களின் பாவங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

Comments

Popular posts from this blog

ஊனுக்கு ஊனிட்ட வேடவன்

ஆதவனால் கிடைத்த அன்பு மகன்

தியாகச் சின்னம் ஊர்மிளா